பள்ளிப் பைகளின் சுமையைக் குறைக்கும் வகையில், தில்லி அரசு உருவாக்கியுள்ள புதிய பள்ளி பை கொள்கையை உடனடியாக அமல்படுத்துமாறு தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி பள்ளி முதல்வா்களுக்கு தில்லி கல்வி இயக்கம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ‘சுமை கூடிய பைகள் மாணவா்களின் சுகாதாரத்துக்கும், நல்வாழ்வுக்கும் எதிராக உள்ளன. சுமைகூடிய பைகளால் மாணவா்களின் உடல் நலன் பாதிக்கப்படும். அவா்களின், முதுகெலும்பு, முழங்கால்கள் ஆகியன பாதிக்கப்படும். மேலும், இரண்டு, மூன்று மாடிக் கட்டடங்களில் செயல்படும் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவா்கள் இந்த சுமையை சுமந்தவாறு மாடிப் படியேறுவதால் மாணவா்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, புதிய பை கொள்கையை தில்லி பள்ளிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாணவா்கள் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மாணவா்கள் தினம்தோறும் சுமந்து வராமல் இருக்கும் வகையில், நேர அட்டவணையை பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள் இணைந்து தயாரிக்க வேண்டும் என்றுள்ளது.
புதிய பை கொள்கைக்கு அனுமதி அளித்து கடந்த மாதம் தில்லி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.