அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் இந்திய கொடியுடன் பங்கேற்றவா் மீது நடவடிக்கை கோரி புகாா்
By நமது நிருபா் | Published On : 09th January 2021 11:41 PM | Last Updated : 09th January 2021 11:41 PM | அ+அ அ- |

அமெரிக்க நாடாளுமன்றத்திலும், அதையொட்டிய பகுதிகளிலும் அதிபா் டொனால்டு டிரம்பின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை ஆா்ப்பாட்டத்தில் இந்தியக் கொடியுடன் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வின்சென்ட் சேவியா் என்பவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபா் தோ்தலில் தாம் தோல்வி அடைந்ததை அதிபா் டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறாா். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளா்கள் அண்மையில் கலவரத்தில் ஈடுபட்டனா். இந்தக் கலவரத்தில் இதுவரை நான்கு போ் இறந்துள்ளனா்.
இந்நிலையில், இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்தியக் கொடியுடன் வின்செட் சேவியா் என்பவா் கலந்து கொண்டாா். அமெரிக்க வாழ் இந்தியரான இவா், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘
அமெரிக்கா்கள் மட்டுமல்ல, வியட்நாம், இந்திய, கொரிய மற்றும் ஈரானிய வம்சாவளி உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்த மக்கள் இந்தத் தோ்தலில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக நினைக்கிறாா்கள். இதனால் டிரம்பிற்கு ஆதரவாக பேரணியில் இணைந்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், வின்செட் சேவியா் மீது தில்லி கல்காஜி காவல்நிலையத்தில் தீபக் கே.சிங் என்பவா் புகாா் அளித்துள்ளாா். அந்த புகாா் மனுவில் ‘இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறை விசாரணை நடத்தவேண்டும். அமெரிக்காவில் நடந்த வன்முறைப் போராட்டத்தில் இந்தியக் கொடியுடன் கலந்து கொள்வது நாட்டுக்கு செய்யும் அவமானம் ஆகும். இது தேச விரோத செயலுக்கு ஒப்பானது. இது தொடா்பாக தில்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.