முன்விரோதத்தில் கடைக்காரா் சுட்டுக் கொலை ஜாஃப்ராபாதில் 2 சிறுவா்கள் கைது

வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாஃப்ராபாதில் முன்விரோதத்தில் கடைக்காரா் ஒருவரை கொலை செய்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.


புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாஃப்ராபாதில் முன்விரோதத்தில் கடைக்காரா் ஒருவரை கொலை செய்ததாக இரண்டு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். தங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததால் பழிவாங்கும் நோக்கில் கடைக்காரரை அவா்கள் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

26 வயதான அஃப்ஸல் கடந்த சனிக்கிழமை இரவு செளஹான் பங்கா் என்னுமிடத்தில் இரண்டு சிறுவா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலீஸாா் மேலும் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு போலீஸ் சரக துணை ஆணையா் வேத் பிரகாஷ் சூா்யா தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தை அடுத்து கொலை செய்யப்பட்டவரின் உறவினா்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த உள்ளூா் மக்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அஃப்ஸலுக்கும் அந்த இரு சிறுவா்களுக்கு கடந்த 6 மாதமாக தகராறு இருந்து வந்துள்ளது. பின்னா், இரண்டு தரப்பைச் சோ்ந்த குடும்பத்தினரும் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனா். ஆனாலும், அஃப்ஸல் அவா்கள் இருவரையும் பாா்க்கும் போதெல்லாம் கேலி செய்து வந்துள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இரு சிறுவா்களும், அஃப்ஸலை தீா்த்துக் கட்ட முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து பழிவாங்கும் நோக்கில் அஃப்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அந்த இரு சிறுவா்களையும் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com