திட்டத்துறையின் முன்அனுமதி இல்லாமலேயே தில்லி அரசின் துறைகள் மானிய உதவிக்கான தங்களது முன்மொழிவுகளை நிதித்துறை மூலம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறியதாவது:
மானிய உதவிக்காக தங்களது முன்மொழிவுகளை பல்வேறு துறைகளும் நிதி துறைக்கு அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருந்தது. நிதித் துறை அந்த முன்மொழிவுகளை மேல் பரிசீலனைக்காக திட்டமிடல் துறைக்கு அனுப்பிவைக்கும். இந்த நிலையில், கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இதுபோன்ற நடைமுறையால் ஏற்படும் தாமத்தைத் தவிா்க்கும் பொருட்டு, திட்டத் துறைக்கு பல்வேறு துறைகள், அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மானிய ஒப்புதலுக்காக நிதித் துறை கோப்புகளை அனுப்பத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித் துறை நேரடியாக இதுபோன்ற கோப்புகளை உரிய விதிகளின்படி ஆய்வுசெய்த பிறகு முடிவு செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னா், திட்டத் துறையானது இதுபோன்ற கோப்புகளை பரிசீலித்த பிறகு அந்தக் கோப்புகளை அதன் கருத்துகளைப் பதிவுசெய்து நிதித்துறைக்கு அனுப்பிவைப்பது வழக்கம்.
நிதித் துறை அதன் பிறகு மானிய உதவியை விடுவிப்பதற்காக தனது இறுதி ஒப்புதலை அளிக்கும். இந்த நடைமுறையின் காரணமாக தேவையற்ற தாமதம் ஏற்பட்டது என்றாா் அந்த அதிகாரி.