தில்லியில் வெப்பம் தணிந்த மேக மூட்ட சூழல்!
By DIN | Published On : 13th July 2021 08:03 AM | Last Updated : 13th July 2021 08:03 AM | அ+அ அ- |

தில்லியில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை திங்கள்கிழமை மாலை வரை பெய்யவில்லை. எனினும், நாள் முழுவதும் மேகமூட்ட சூழல் காணப்பட்டது.
தில்லியில் சில நாள்களாகக் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் இரு தினங்களாக வெப்பம் சற்று தணிந்து இருந்தது. தில்லியில் தென்மேற்குப் பருவமழை ஞாயிற்றுக்கிழமை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் மழை பெய்யவில்லை. திங்கள்கிழமையும் இரவு 8 மணிவரை பெய்யவில்லை.
தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆண்டு பருவமழை மிகவும் தாமதம் ஆகியுள்ளது. 2012-ஆம் ஆண்டில் ஜூலை 7-ஆம் தேதியும், 2006-இல் ஜூலை 9-ஆம் தேதியும் தில்லியை பருவமழை வந்து அடைந்தது.
அதேபோன்று 2002-ஆம் ஆண்டில் ஜூலை 19-ஆம் தேதி முதல் பருவ மழை பெய்தது. அதற்கு முன்பாக 1987-இல் ஜூலை 26-ஆம் தேதி தான் மிகவும் தாமதமாக பருவமழை வந்தடைந்தது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி அதிகரித்து 37.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 74 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 55 சதவீதமாகவும் இருந்தது.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 8 மணி அளவில் 81 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.