தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மும்பை, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.
தில்லியில் பருவ மழை தாமதமாக தொடங்கிய நிலையில் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், தில்லியில் உள்ள முக்கிய சாலைகள், புறநகரான குருகிராம், நொய்டா, காசியாபாதில் உள்ள தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால், பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், மகாராஷ்டிரத்தின் மும்பை, நவிமும்பை, தாணே, பால்கர் உள்ளிட்ட நகரங்களிலும் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.