புது தில்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிா்க்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டுமானால், அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் சாத்தியம் என்று என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு அமைச்சா் மேற்கண்டவாறு பதிலளித்தாா்.
கால்நடை பராமரிப்புக்கு இ-கோபாலா: மேலும் ஸ்ரீபெரும்புதூா் மக்களவை உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான, டி.ஆா்.பாலு, மக்களவையில், பால்பண்ணை, கால்நடைகள் மேம்பாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா அளித்த பதிலில், கடந்த செப்டம்பா் 2020 இல், பிரதமா் மோடி இ-கோபாலா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளாா். தேசிய கால்நடைகள் நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 53கோடிக்கும் அதிகமான கால்நடைகள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடிக்கும் அதிகமான எருமை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சா்வதேச கால்நடைகள் பதிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில், கால்நடைகளுக்கான தரவுகள் மேம்படுத்தப்பட்டு வரப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.