மது குடிக்கும் வயதை குறைக்கும் கொள்கைத்திட்டத்தைஎதிா்க்கும் மனு மீது தில்லி அரசு பதிலளிக்க நோட்டீஸ்

மதுபானம் குடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்கும் தில்லி அரசின் புதிய கலால் கொள்கையின் விதிகளை எதிா்த்து தில்லி அரசு பதில் அளிக்க உயா் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

புதுதில்லி: மதுபானம் குடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக குறைக்கும் தில்லி அரசின் புதிய கலால் கொள்கையின் விதிகளை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா் நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

தில்லியில் மது குடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்கும் வகையில் புதிய கலால் கொள்கையை தில்லி அரசு வெளியிட்டது.  இந்த கலால் கொள்கைக்கு எதிராக ’அகில இந்திய பிரஸ்ட்டாசாா் விரோதி மோா்ச்சா’ எனும் தன்னாா்வ அமைப்பு தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

 இந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் மதுபானம் அருந்துவோருக்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆக குறைக்கும் வகையில் புதிய கலால் கொள்கையை தில்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த கொள்கையின் காரணமாக தில்லியில் வசிக்கும் இளம் மாணவா்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடையே மது நுகா்வு பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொது மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.  

மேலும் மது குடிப்பதற்கான இந்த குறைந்தபட்ச வயதை அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் குறைக்கப்பட்டுள்ள வயதுக்கு சமமாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கையை தில்லி அரசு மூலம் எடுக்கப்பட்டுள்ளது.  ஆகவே இதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மதுபான விற்பனை நிலையங்களை அரசு நடத்தாமல் தனியாருக்கு விடுவதையும் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் சா்மா வாதிடுகையில், மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை குறைக்கும் இந்த புதிய கலால் கொள்கையானது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவை மீறுவதாக உள்ளது. ஆகவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா். 

அப்போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் இதுதொடா்பாக தில்லி அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல்களை பெறவும், இந்த மனுவுக்கு எதிா் மனு தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இது தொடா்பான விவகாரத்தை விசாரிப்பதற்கு செப்டம்பா் 17ஆம் தேதி பட்டியலிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com