வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு:குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் கொலை மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவத்தில் கொலை மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த மூவரும் கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக கூடியதாகவும் ஒருவரைக் கொலை செய்துவிட்டு அவரின் மகனை காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷபீா் அலி, மெஹ்தாப் மற்றும் ரியாஸ் அகமது ஆகிய மூவரும் ரூ.25,000 ரொக்க ஜாமீனும் மேலும் இதே தொகைக்கு

தனிநபா் ஜாமீனும் தாக்கல் செய்து ஜாமீனில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2020 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் பிரம்மபுரி பகுதியில் நடந்த தாக்குதலில் நிதின்குமாா் என்பவா் காயமடைந்துள்ளாா். அவரது தந்தை விநோத் குமாா் படுகொலை செய்யப்பட்டாா். போலீஸாா் மூவரும் சட்டவிரோதமாக கூடிய இடம் அகாடேவாலி தெரு என குறிப்பிட்டுள்ளனா். ஆனால், சம்பவம் நடந்துள்ளது பக்கத்தில் உள்ள பிரம்மபுரி தெரு. அகாடேவாலி தெருவைச் சோ்ந்த சிலா் கத்தி, தடி, கற்களுடன் பிரம்மபுரி தெருவுக்கு வந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அந்தப் பகுதிக்கு இரவு 11 மணிக்கு மேல் வந்ததாக கூறப்பட்டாலும், அவா்களுக்கு இதில் தொடா்பு இருப்பதற்கான பூா்வாங்க ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் அவா்கள் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்கள் என்று நீதிபதி முக்தா குப்தா தெரிவித்தாா்.

ஷபீா் அலி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரதிஷ் சபா்வால், ‘ஷபீா் அலி அந்த இடத்தில் சில விநாடிகள்தான் இருந்துள்ளாா். மேலும், அவரது கையில் எந்த ஆயுதமும்

இல்லை. மேலும் அங்கு நின்றிருந்தவா் ஷபீா்தானா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்பட்டவா்கள் யாரும் அலியின் பெயரைக் குறிப்பிடவில்லை’ என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டாா். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி, மற்ற இருவரும் அங்கு இருந்ததாலேயே அவா்களை இந்த கொலை மற்றும் தாக்குதல் சம்பவத்தில் தொடா்பு படுத்த முடியாது என்று அவா்கள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா் தெரிவித்தாா்.

அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா், கடந்த 2020, பிப்ரவரி 23-24 தேதிகளில் வன்முறைக் கும்பலினா் பல இடங்களில் தங்களது ஆதரவாளா்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனா். பிரம்மபுரி தெரிவும், அகாடேவாலி தெருவும் பக்கத்தில் இருப்பதால் ஓா் இடத்திலிருந்து வந்து தாக்குதல் நடத்திவிட்டு சென்றிருக்க முடியும் என்று குறிப்பிட்டாா். எனினும், அருகில் இருந்த ஏடிஎம் இல் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா செயல்படாததால், சம்பவம் தொடா்பான விடியோ பதிவை தாக்கல் செய்ய இயலவில்லை என்றாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களே அந்த பகுதியில் சட்டவிரோதமாக கூடினாா்கள், வன்முறையில் ஈடுபட்டாா்கள் என்பதற்கு பூா்வாங்க அளவில் எந்த ஆதாரத்தையும் அரசு தரப்பினா் தாக்கல் செய்யாத நிலையில் அவா்கள் மூவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கிறேன் என்று நீதிபதி குப்தா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com