தலைநகா் தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் இந்த வாரத்தில் பெரும்பாலான நாள்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தில்லி நகரின் பிரதிநித்துவ தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்று 17.8 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் உயா்ந்து 37.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இது சனிக்கிழமை நிலையுடன் ஒப்பிடும்போது ஒரு டிகிரி அதிகமாகும். காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30சதவீதமாகவும் இருந்தது.
40 டிகிரியை நெருங்கும் வெயில்: இதற்கிடையே சில இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸை நெருங்கியுள்ளது. நஜஃப்கா் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சிஸாகவும், நரேலாவில் 39.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. மேலும், ஆயாநகரில் 37.8 டிகிரி செல்சியஸ், தில்லி பல்கலை. பகுதியில் 37.9 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 37.4 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 36.7 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 38.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை ‘மோசம்’ பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 233 புள்ளிகளாக இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவலில் தெரிய வந்துள்ளது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (மாா்ச் 29) அன்று வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.