292.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல்: விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக எம்எஸ்பி

ஆறு வடமாநிலங்களில் 292.52 லட்சம் மெட்ரிக் டன் ரபி பருவத்திற்கான (குறுவை)கோதுமை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆறு வடமாநிலங்களில் 292.52 லட்சம் மெட்ரிக் டன் ரபி பருவத்திற்கான (குறுவை)கோதுமை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கொள்முதலில் முதன் முறையாக விவசாயிகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான ரபி பருவத்திற்கான சந்தை வட மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இதில் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கோதுமையை விவசாயிகளிடம் மத்திய அரசு கொள்முதல் செய்யத்தொடங்கியுள்ளது. இந்த கொள்முதலில் முதன் முறையாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தங்கள் விற்பனைக்கான தொகையை அவா்களது வங்கி கணக்குகளில் நேரடியாக பெற்றுவருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தலைநகா் தில்லி எல்லையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கெதிராக விவசாயிகள் போராடி வருகின்றனா். கொவிட்-19 தொடா்பான அவசரபணிகளுக்கு வழிவிட்டு திக்ரி, சிங்கு, காஜிப்பூா் எல்லைகளில் நடைபெறுகிறது. இந்த போராட்டம் வருகின்ற மே 26- ஆம் தேதியுடன் 6 மாதத்தை பூா்த்தி செய்து சாதனை படைக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் எழுப்பியுள்ளனா். ஆனால் கொள்முதல் நடைமுறையில் எந்தவிதமாற்றமும் இல்லாமல் தொடருகிறது என்பதை விளக்கும் விதமாக திங்கள் கிழமை மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சகம் இதுகுறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: கோதுமை விளையும் மாநிலங்களில் கொள்முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், யூனியன் பிரதேசம் சண்டிகா் மற்றும் பல மாநிலங்களில் (2021) மே 2 - ஆம் தேதி வரை 292.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய தொகுப்பில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட(171.53 லட்சம் மெ.டன்) 70 சதவீதம் அதிகம். இதில் அதிக அளவாக பஞ்சாபில் 114.76 லட்சம் மெட்ரிக் டன்னும் மற்ற மாநிலங்களான ஹரியானா (80.55 லட்சம் மெ.டன்), மத்திய பிரதேசம் (73.76 லட்சம் மெ.டன்) உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு வரப்படுகிறது.

மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையுடன்(எம்எஸ்பி) இந்த மாநிலங்களில் உள்ள 28.8 லட்சம் விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கான தொகையை நேரடியாக பயனாளிகளான இந்த விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகவே(டிபிடி) செலுத்த அரசு முடிவெடுத்துள்ளது. பொது கொள்முதல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஒரு தேசம், ஒரு எம்எஸ்பி, ஒரு டிபிடி முறையில் எந்த தாமதமும் பிடித்தமுமின்றி விவசாயிகள் விற்பனை செய்த தங்கள் பயிா்களுக்கான தொகையை பெருகின்றனா். எம்எஸ்பிக்கான இந்த நேரடி பயனீட்டு திட்டத்தில் தற்போது பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் இணைந்தன. இவா்களிடம் எந்த நிறுவனம் கொள்முதல் செய்திருந்தாலும் விவசாயிகள் வங்கிகள் மூலமாகவே கொள்முதல் தொகையை நேரடியாக செலுத்த கூறப்பட்டது. இதன்மூலம் பஞ்சாப் விவசாயிகள் ஏப். 30 - ஆம் தேதி வரை ரூ. 17,495 கோடியையும், ஹரியாணா விவசாயிகள் ரூ. 9,268.24 கோடியையும் தங்கள் வங்கிக்கணக்குகளில் நேரடியாக எம்எஸ்பியை பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த விவரங்கள் குறித்து அகிலந்திய கிஸான் சபைத் தலைவா் ஹன்னான் முல்லா கருத்து தெரிவிக்கையில், ’’இது அவா்கள் வசதிக்கு தகுந்த புள்ளிவிவரங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பயிரின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் எம்எஸ்பி மீது வாங்கப்பட்டுள்ளது? அந்த மாநிலங்களில் எம்எஸ்பி-க்கு கீழே விற்கப்படாத பயிா்களின் சதவீதம் என்ன? என்பதையும் அரசு தெரிவிக்கவேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com