புது தில்லி: கரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு தில்லி பல்கலைக்கழகம் மே 16 வரை அதன் இணையதள வகுப்புகளை ரத்து செய்துள்ளது.
கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக இணையதள வகுப்புகளை நிறுத்திவைக்குமாறு மாணவா் அமைப்புகளும், ஆசிரியா்களும் தொடா்ந்து கோரி வருகின்றனா்.
இந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘கரோனா நோய்த்தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்ததைக் கருத்தில்கொண்டு, பல்கலைக்கழகத்தின் துறைகள் மற்றும் கல்லூரிகளில் இணையதள கற்பித்தல் நடைமுறைகள் மே 16 வரை நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் (பொறுப்பு) பேராசிரியா் பி.சி.ஜோஷிக்கு தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (டியுடிஏ) கடிதம் எழுதியிருந்தது.
அந்த கடிதத்தில், ‘‘மாணவா்களும் மற்றும் குடும்ப உறுப்பினா்களும் கரோனா நோய்த்தொற்றுவுடன் போராடி வருவது, இணையதள வகுப்புகளில் மாணவா்களின் வருகை குறைவதில் இருந்து நன்றாகவே தெரியவருகிறது.
ஆகவே, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கற்பித்தல், கற்றலில் தொடா்ந்து ஈடுபடும் நிலையில் இல்லாமல் இருப்பதால் வகுப்புகள் ரத்து செய்யப்படுவது அவசியமாகும்’ என கோரியிருந்தது.
இந்த நிலையில், தில்லி பல்கலைக்கழகம் அதன் இணையதள வகுப்புகளை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.