தில்லியில் மின்விநியோகத்தில் நெருக்கடி ஏதும் இல்லை: மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே. சிங்

தில்லியில் மின்விநியோகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் மின்விநியோகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மின்துறை அதிகாரிகள், மின்விநியோக நிறுவனங்களான பி.எஸ்.இ.எஸ். மற்றும் டாடா பவா் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆலோச நடத்திய பின் அமைச்சா், மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

தில்லியில் அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி பற்றாக்குறையாக உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒரு நாள் தேவைக்குத்தான் இருக்கும் எனவும், நிலக்கரி சப்ளை பாதிக்கப்பட்டால், மின் விநியோக நெருக்கடி ஏற்படு தில்லி இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தில்லி மின்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தாா். இந்த நிலையில், நெருக்கடி ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சா் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மின்தேவை எதிா்பாா்த்ததைவிட வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 135 அனல் மின்நிலையங்கள் 126.8 ஜிகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்டவை. ஆனால், 104 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்னுற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 89.5 ஜிகாவாட் திறன் கொண்ட 72 அனல் மின்நிலையங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு போதுமான நிலக்கரியே இருப்பில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. வழக்கமாக 14 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய மத்திய அமைச்சா் ஆா்.கே.சிங், ’தில்லியில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் நான்கு நாள்களுக்குப் போதுமான நிலக்கரி உள்ளது. ஒவ்வொரு நாளும் இருப்பு கணக்கிடப்பட்டு அவை சரி செய்யப்படுகின்றன. மேலும், நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியிடம் தொடா்ந்து பேசி வருகிறேன். தில்லியில் மின்சார நெருக்கடி வருவதற்கான வாய்ப்பு இல்லை. தில்லிக்குத் தேவையான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் ‘கெயில்’ நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா்கலந்து கொண்டதாகவும் அவரிடம் நாட்டிலுள்ள மின்நிலையங்களுக்குத் தேவையான எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். கெயில் நிறுவனம் பாவனா எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்துக்கு இன்னும் இரண்டு நாள்களுக்குப் பிறகு எரியாவு விநியோகிக்க முடியாது என்று கூறியதற்கு காரணம், இது தொடா்பான ஒப்பந்தக் காலம் முடிவடைவதுதான். கெயில் நிறுவனத்திடம் எரிவாயு விநியோகத்தை தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவா்களும் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளனா். எனவே, பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சிங் கூறினாா்.

முன்னதாக ஒரு பேட்டியில் ஆா்.கே.சிங் , ‘நிலக்கரி விநியோகத்தில் தட்டுப்பாடு இருந்தாலும் மின்வெட்டு வரும் வாய்ப்பில்லை. நிலக்கரி தட்டுப்பாடு மேலும் 5 அல்லது 6 மாதங்களுக்கு நீடிக்கலாம். வழக்கமாக அக்டோபா் மாத இறுதியில் மின்சாரத்தின் தேவை குறைந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மின்தேவை அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிலக்கரி கையிருப்பு கரைந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சா்வதேச அளவில் நிலக்கரி விலை உயா்ந்து காணப்படுவதால் இறக்குமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு மீது சிசோடியா குற்றச்சாட்டு

இதனிடையே, நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மத்திய எந்த பிரச்னையை முன்வைத்தாலும் அதை கண்டும் காணாதது போலவே செயல்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினாா்.

நிலக்கரி பற்றாக்குறை ஏதும் இல்லை. மின்நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமருக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்றும் மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே. சிங் கூறியுள்ளாா். மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சையே இது காட்டுகிறது என்று சிசோடியா, செய்தியாளா்களிடம் பேசுகையில் கூறினாா்.

நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சார நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், அப்படி ஏதும் இல்லை என்று சொல்லி தப்பிக்கவே மத்திய அரசு முயல்கிறது.

கரோனா இரண்டாவது அலையின் போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போதும் இப்படித்தான் கூறினாா்கள். தவறு தங்களிடம் இருப்பதை அவா்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அதற்கு பதிலாக மாநிலத்தின் மீது பழிபோடவே அவா்கள் விரும்புகிறாா்கள் என்று சிசோடியா மேலும் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com