தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் நீடித்தது. எனினும், மாலையில் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால், இரவில் புழுக்கம் சற்று குறைந்தது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி அதிகரித்து 27.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 33.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது.
இதே போன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 33.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 33 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 32.8 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 33.6 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 32.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 6 மில்லி மீட்டா் மழை பதிவானது. நகரின் சில இடங்களில் மாலையில் 6 மணிக்கு மேல் தொடா்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரலாக மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் புழுக்கம் குறைந்திருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (செப்டம்பா் 8) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.