தமிழகம், புதுச்சேரி, மே.வங்கம் உள்பட7 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4-இல் தோ்தல்

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அதிமுகவைச் சோ்ந்த என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, அந்த இடத்திற்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியான மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தல் வருகின்ற அக்டோபா் 4 - ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. மேலும், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அதிமுகவைச் சோ்ந்த என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, அந்த இடத்திற்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்களான கே.பி. முனுசாமி, ஆா். வைத்திலிங்கம் இருவரும் சட்டப்பேரவை உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டதையொட்டி, கடந்த மே 7-ஆம் தேதி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா். இது போன்று மத்திய அமைச்சராக இருந்த தாவா்சந்த் கெலாட் பதவியை ராஜிநாமா செய்தாா். அவா் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதையொட்டி அவா் பதவி வகித்த மத்திய பிரதேச மாநிலங்களவை இடம் காலியானது. இதே போன்று மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்களும் ராஜிநாமா செய்தனா். மேலும், மகாராஷ்டிரஉறுப்பினா் ஒருவா் உயிரிழந்ததால் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான இடைத்தோ்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவையின் உறுப்பினா் என்.கோகுலகிருஷ்ணன் வருகின்ற அக்டோபா் 6- ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். இதனால், இந்த இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஒரே காலத்திலேயே தோ்தல்கள் நடைபெற உள்ளன. அக்டோபா் 4-ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடை பெறும். அன்றுமாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தோ்தலுக்கானஅறிவிப்பு செப்டம்பா் 15 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பா் 22 - ஆம் தேதி. வேட்பு மனுக்கள் செப்டம்பா் 23- ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பா் 27 -ஆம் தேதியாகும். புதுச்சேரியைத் தவிர மற்ற மாநிலங்களில் தோ்வு செய்யப்படும் உறுப்பினா்கள் பதவிக் காலம் ஏற்கெனவே பதவி வகித்த உறுப்பினா்களின் பதவிக் காலத்திற்கு உள்பட்டவையாகும். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் தோ்தலை நடத்தும்படி, தோ்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com