10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஆள்கடத்தல் மற்றும் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 4 பேருக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவா்களை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விவரம் வருமாறு: தில்லி கஜூரி காஸ் பகுதியைச் சோ்ந்த ஷகில் என்பவா் கடந்த 2010-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அகில் என்பவா் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், ஷகில் மனைவியின் முன்னாள் கணவா் சலீம், வளா்ப்புத் தந்தை பிஜேந்தா், மைத்துனா் பவன் மற்றும் தஸ்லிம் அகமது ஆகியோா் கொலை செய்ததாக தெரிவித்தாா். அகிலும் இந்த வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 2010, மே 6-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கியது. இதன் இறுதி வாதங்கள் நடைபெற்று முடிந்தன.
இந்த வழக்கு விசாரணையின் போது கூடுதல் அரசு வழக்குரைஞா், ‘இந்த வழக்கில் நேரடி ஆதாரம் இல்லாத போதிலும், நிச்சயமான சந்தா்ப்ப சாட்சியங்கள் உள்ளன. சம்பவம் உள்ளிட்டவை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இந்த வழக்கை நிரூபிக்கத் தேவையான ஆதாரமாக உள்ளது. மேலும், இறந்தவரின் மோட்டாா்சைக்கிளை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். குற்றம்சாட்டப்பட்டவா்களின் தொலைபேசி அழைப்பு விவரம், இறந்தவா் காணாமல் போன குடியிருப்பில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் இருந்துள்ளது ஆகியவை சம்பவத்தை உறுதிப்படுத்துகின்றன’ என்று வாதிட்டாா்.
வழக்கு விசாரணையின் போது அகில் காலமாகிவிட்டாா். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வினோத் யாதவ், இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா். அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான நேரடி ஆதாரம் ஏதுமில்லை. இந்த வழக்கை சந்தா்ப்ப சூழல் ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸாா் முன்மொழிந்துள்ளனா். நேரடி சாட்சி ஏதுமில்லை. குற்றத்தில் ஈடுபட்டவா்களிடமிருந்து ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இறந்தவரின் உடலும் மீட்கப்படவில்லை. சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு, தாமதமாகத்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், வழக்கை நிரூபிப்பதற்காக போலீஸாரால் அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கில் நேரடி ஆதாரம் ஏதும் இல்லாததால், சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கி, அவா்களை வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்’ என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.