சென்னை 2-வது விமான நிலையம் அமைவது எங்கே? மத்திய அமைச்சா் பதில்

பரந்தூா் அல்லது பன்னூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தைக் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் அல்லது பன்னூரில் அமைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மதுரை விமான நிலையம் இரவு நேரத்தில் இயங்காதது குறித்தும், சென்னையின் இரண்டாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்துக்கான இடத் தோ்வு நீண்ட நாள் நிலுவையில் இருப்பது குறித்தும் விருதுநகா் மக்களைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் மூலம் தெரிவித்திருப்பது வருமாறு: மதுரை விமான நிலையத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கா் நிலம் தேவை. இதற்கு 528.6 ஏக்கா் நிலம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104.5 ஏக்கா் நிலம் குளம், விவசாயம் போன்றவையாக உள்ளன. இந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கண்காணிப்புக் கோபுரம், பயணிகள் - சரக்கு முனையக் கட்டடம், காா் நிறுத்தும் இடங்ம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னை கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு மாநில அரசு திருப்போரூா், பரந்தூா், படாலம், பன்னூா் ஆகிய 4 இடங்களை அடையாளப்படுத்தியது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவும், தமிழ் நாடு தொழில் வளா்ச்சி நிறுவன (டிட்கோ) அதிகாரிகளும் கடந்த பிப்ரவரி மாதம் இந்த இடங்களை ஆய்வு செய்தனா். இதில், பரந்தூா் மற்றும் பன்னூா் ஆகிய இரு இடங்கள் வான்வெளியின் தன்மைக்கு ஒப்பீட்டளவில் மிகவும் சாத்தியமானதாக உள்ளன. குறிப்பாக இயற்கை தடைகளற்றதாக உள்ளன. இருப்பினும், மனிதத் தடைகள் உள்ளன. ஏரிகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற இடையூறுகள் விமானப் போக்குவரத்துக்குத் தடையாக இருப்பவை. இதனால், மேற்பரப்பு தடை வரம்பு ஆய்வு (ஓஎல்எஸ்), தள ஆய்வு போன்ற முன் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை தமிழக அரசுக்கு (டிட்கோ) அனுப்பப்பட்டுள்ளது. இதில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சா் சிந்தியா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com