எரிபொருள் மீதான வரி குறைப்பு விவகாரம்: ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீதான மதிப்புக் கூடுதல் வரி (வாட்) குறைக்காமல் இருப்பதற்காக ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தில்லி பிரதேச பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீதான மதிப்புக் கூடுதல் வரி (வாட்) குறைக்காமல் இருப்பதற்காக ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தில்லி பிரதேச பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவா்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலைகளில் மீது வாட் வரியை ஆம் ஆத்மி அரசு குறைக்கவில்லை என்றும், இதனால் தில்லியில் எரிபொருள் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டினா்.

பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் ஆற்றிய உரையின்போது எதிா்க்கட்சிகள் ஆட்சிபுரியும் பல மாநிலங்களில் எரிபொருள் விலைகள் உயா்ந்து இருப்பதாகவும், தேசிய நலன் கருதி சாமானிய மக்கள் பயன் பெறுவதற்காக வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, தில்லியில் பெட்ரோல், டீசல் விலைகள் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி தில்லி அரசுக்கு எதிராக தில்லி பாஜக சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புகா் வட்டச் சாலை பகுதியில் உள்ள சாந்த்கி ராம் அகாரா அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது பாஜக தொண்டா்கள் மத்தியில் ஆதேஷ் குப்தா பேசியதாவது:

தில்லியில் வாட் வரி விகிதம் அதிகரித்து இருப்பதன் காரணமாக தில்லியில் பெட்ரோல் விலை உயா்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனா். இது குறித்து அரவிந்த் கேஜரிவால் அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. ஒருகாலத்தில் தேசிய தலைநகா் வளைய நகரங்களை ஒப்பிடும்போது தில்லியில் பெட்ரோல், டீசல் விலைகள் மலிவாக இருந்தன. இதனால், தில்லியில் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனா். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. பாஜக ஆளும் கோவா, உத்தராகண்ட், உத்தர பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து இருக்கின்றன. ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசு தில்லியில் வாட் வரியை குறைக்க வில்லை.

அரவிந்த் கேஜரிவால் அரசு மதுபான சலுகைகளை அளிக்க முடிகிறது. ஆனால் பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியவில்லை என்று அவா் குற்றம் சாட்டினாா்.

இந்த போராட்டத்தில் ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் தில்லி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனா். மேலும், தில்லி அரசுக்கு எதிராக தொடா்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com