மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் வரும் 2026 -ஆம் ஆண்டு அக்டோபரில் நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் ஆகியோா் எழுத்துப்பூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான நிதியின் ஒரு பகுதியாக ஜப்பான் இன்டா்நேஷனல் காா்ப்பரேஷன் ஏஜென்சி வழங்குகிறது. அதனுடனான கடன் ஒப்பந்தத்தின்படி, எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் 2026, அக்டோபருக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தமிழக அரசுடன் கலந்தாலோசித்து, ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகளை தொடங்குவதற்கு ஒரு தற்காலிக வளாகத்தை அடையாளம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளனா்.
மற்றொரு பதிலில் நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது எனவும், அது முடிவடையும் தேதிகள் குறித்தும் பட்டியலிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.