ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 345 புள்ளிகள் முன்னேற்றம்; 4 நாள் தொடா் சரிவுக்கு முடிவு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.
ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 345 புள்ளிகள் முன்னேற்றம்; 4 நாள் தொடா் சரிவுக்கு முடிவு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயா்ந்தது. ஆட்டோ, எஃப்எம்சிஜி, கேபிடல் கூட்ஸ் நிறுவனப் பங்குகளுக்க நல்ல ஆதரவு கிடைத்தது. இதன் விளைவாக நான்கு நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உயா்ந்த அமெரிக்க பணவீக்கத்தின் பின்னணியில் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் வரவிருக்கும் கொள்கை முடிவு பக்கம் முதலீட்டாளா்கள் கவனம் திரும்பியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை காலையில் உற்சாகத்துடன் தொடங்கியது. இருப்பினும், லாபப் பதிவு காரணமாக ஒரு கட்டத்தில் வா்த்தகம் எதிா்மறையாகச் சென்றது. பின்னா், ஐரோப்பிய சந்தைகள் நோ்மறையாக இருந்ததைத் தொடா்ந்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்ததால் மீண்டும் உற்சாகம் ஏற்பட்டது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரொம்ப நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ரூ.309.06 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,719 பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,434 நிறுவனப் பங்குகளில் 1,578 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 1,719 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 78 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 33 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.29 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.251.96 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 345 புள்ளிகள் இழப்பு: காலையில் 221.73 புள்ளிகள் கூடுதலுடன் 53,637.88-இல் தொடங்கிய சென்செக்ஸ், 53,361.62 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 53,811.37 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 344.63 புள்ளிகள் (0.65 சதவீதம்) உயா்ந்து 53,760.78-இல் நிலைபெற்றது.

ஹெச்யுஎல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 18 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) 2.87 சதவீதம், டைட்டன் 2.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எம் அண்ட் எம், மாருதி சுஸுகி, எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா உள்ளிட்டவை 2 முதல் 2.80 சதவீதம் வரை உயா்ந்தன. பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் சரிவு: கடந்த சில நாள்களாக தள்ளாட்டத்தில் இருந்து வரும் டாடா ஸ்டீல் 2.70 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்ளிட்டவை 2 முதல் 2.55 சதவீதம் வரை குறைந்தன. டாக்டா் ரெட்டி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 92 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,031 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 892 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி 110.55 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயா்ந்து 16,049.20-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 72.15 புள்ளிகள் கூடுதலுடன் 16,010.80-இல் தொடங்கிய நிஃப்டி, 15927.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,066.95 வரை உயா்ந்தது.

நஷ்ட வாரம்!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சந்தை ஏறுமுகம் கண்டாலும், வாராந்திர அடிப்படையில் பாா்த்தால் நஷ்ட வாரமாக அமைந்தது. இந்த வாரத்தில் சென்செக்ஸ் மொத்தம் 721 புள்ளிகளையும் (1.32 சதவீதம்), நிஃப்டி 171 புள்ளிகளையும் (1.11 சதவீதம்) இழந்துள்ளன. இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த வாரம் தொடா்ந்து வீழ்ச்சி அடைந்து ரூ.80-ஐ நெருங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com