புது தில்லி: சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் ஜாமீன் கோரும் மனு மீதான தனது உத்தரவை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.
இந்தவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல், இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு உத்தரவை ஒத்திவைத்தாா். இந்த உத்தரவை நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பிக்கக் கூடும். மே 30-ஆம் தேதி கைதான சத்யேந்தா் ஜெயினின் அமலாக்கத் றை காவல் ஜூன் 13-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அவரது காவலை இரு வாரங்களுக்கு நீதிமன்றம் நீட்டித்திருந்தது.
இந்த நிலையில், ஜாமீன் கோரும் மனு மீது அவரது தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஹரிஹரன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா். அமலாக்கத் றை தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி ஜாமீன் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து வாதிட்டாா்.
முன்னதாக, அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவா்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், 2.85 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.