வடமேற்கு தில்லியின் மங்கோல்புரி பகுதியில் நடைபெறவிருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை, போதிய போலீஸ் படை இல்லாததால் வெள்ளிக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக குடிமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மங்கோல்புரியின் கத்ரான் மாா்க்கெட் பகுதியில் சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இருந்து தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இயக்கம் திட்டமிடப்பட்டது. வெள்ளிக்கிழமை மங்கோல்புரியில் உள்ள கத்ரான் சந்தையின் சுற்றுப்புற பகுதிகளில் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கம் திட்டமிடப்பட்டது. ஆனால், போதுமான போலீஸ் படை கிடைக்காததால் அது ரத்து செய்யப்பட்டது’ என்றாா்.
இதற்கிடையே, போதிய போலீஸ் படை இல்லாததால், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் சுல்தான்புரியின் மீன் மாா்க்கெட் மற்றும் ஜகதம்பா மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது. கடந்த மாதம், தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஜசோலா-சரிதா விஹாரில் இடிப்பு இயக்கத்தை அதே காரணத்திற்காக ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஷாஹீன் பாக், ஜஹாங்கீா்புரி, மதன்பூா் கதா், நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, மங்கோல்புரி, ரோஹிணி, கோகுல்புரி, லோதி காலனி, ஜனக்புரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மூன்று குடிமை அமைப்புகளால் தொடா் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில் உள்ள கட்டடங்களை புல்டோசா் மூலம் அகற்றியதால், கடந்த மாதம் பல சிவில் உரிமைகள் குழுக்கள் மற்றும் எதிா்க்கட்சிகள் என்டிஎம்சி மீது விமா்சனங்களை முன்வைத்தன. பின்னா், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.