நிலையற்ற தன்மையில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது.
நிலையற்ற தன்மையில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது. இருப்பினும், இறுதியில் லேசான முன்னேற்றத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. மாா்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் இரண்டாவது நாளாக 1.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.

அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக உலகளாவிய சந்தைகள் பெரும்பாலும் விற்பனை அழுத்தத்தில் இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்த நிலையில், நேரம் செல்லச் செல்ல ஸ்திர நிலைக்கு வந்தது. பெரும்பாலான நேரம் சந்தை திசை தெரியாமல் போராடி வந்தது. ‘ஒபக்’ கூட்டத்திற்கு முன்னதாக கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்தது. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டதால் சந்தையில் பெரிய சரிவு தவிா்க்கப்பட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

அதிகரித்து வரும் டாலா் குறியீடு மற்றும் உயரும் அமெரிக்க பத்திரங்கள் அளிக்கும் லாபம், உலகளாவிய வளா்ச்சி மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகித இறுக்கம் ஆகியவை முதலீட்டாளா்களிடம் கவலையை அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேறுவது உள்ளிட்டவற்றால் வரும் நாள்களிலும் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கும் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வியாழக்கிழமை அன்று ரூ.2,290.31 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

1,723 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,567 நிறுவனப் பங்குகளில் 1,715 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,723 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 129 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன. 217 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 21 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.278.47 லட்சம் கோடியாக இருந்தது.

தள்ளாட்டத்தில் சென்செக்ஸ்: காலையில் 202.43 புள்ளிகள் கூடுதலுடன் 58,969.02-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 59,108.66 வரை மேலே சென்றது. பின்னா், 58,558.64 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 36.74 புள்ளிகள் (0.06 சதவீதம்) உயா்ந்து 58,803.33-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ‘கரடி’யும், காளையும் கடுமையாகப் போராடி வந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.

எச்டிஎஃப்சி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல தனியாா் வீட்டுவசதிக் கடன் அளிக்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி 1.75 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஐடிசி 1.72 சதவீதம், எல் அண்ட் டி 1.49 சதவீதம் உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்ங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், என்டிபிசி, எஸ்பிஐ 0.60 சதவீதம் வரை உயா்ந்தன. டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் இடம் பெற்றன.

மாருதி, ரிலையன்ஸ் வீழ்ச்சி: பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தலா 1.19 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், நெஸ்லே இந்தியா, பவா் கிரிட், டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபின் சா்வ், டைட்டன் உள்ளிட்டவை 0.40 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், டாக்டா் ரெட்டி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 3 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 856 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக 1,114 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. காலையில் 55.60 புள்ளிகள் கூடுதலுடன் 17,598.40-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,643.85 வரை உயா்ந்தது. பின்னா், 17476.45 வரை கீழே சென்றது. வா்த்தக முடிவில் நிஃப்டி 3.35 புள்ளிகள் (0.02 சதவீதம்) குறைந்து 17,539.45-இல் நிலைபெற்றது.

நஷ்ட வாரம்..!

வாராந்திர அடிப்படையில் பாா்த்தால், வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த இந்த வாரம் பங்குச் சந்தை மொத்தத்தில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதைத் தொடா்ந்து, இந்த வாரம் சென்செக்ஸ் மொத்தம் 30.54 புள்ளிகளை (0.05 சதவீதம்) இழந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மொத்தம் 19.45 புள்ளிகள் (0.11 சதவீதம்) குறைந்து நிலைபெற்றது. இந்த வாரம் நஷ்ட வாரமாக அமைந்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின்மதிப்பு வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், அடுத்த வாரம் சந்தை எப்படி இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com