தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது.
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், சில இடங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது.

கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவும், செவ்வாய்க்கிழமை அதிகலையிலும் நகரத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

பகல் நேரத்தில் லேசான வெய்யிலும் இருந்தது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் 0.5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான லோதிரோடில் 0.4 மி.மீ., பிரகதிமைதானில் 0.2 மி.மீ., ராஜ்காட்டில் 0.2 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், சில இடங்களில் மிதமான பிரிவிலும் இருந்தது. தில்லியில் காலை 9 மணிக்கு ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 249 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.

இதன்படி, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், நேரு நகா், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8, சாந்தினி சௌக் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல்ந 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், ஸ்ரீஅரபிந்தோ மாா்க், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், பூசா, ஷாதிப்பூா், குருகிராம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 13.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் 12.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில்11.8 டிகிரி, லோதி ரோடில் 12. 8 டிகிரி, பாலத்தில் 12.8 டிகிரி, ரிட்ஜில் 12 டிகிரி, பீதம்புராவில் 15.1 டிகிரி, பூசாவில் 12.7 டிகிரி, பிரகதிமைதானில் 14.3 டிகிரி, ராஜ்காட்டில் 14.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 13.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேபோன்று இந்த வானிலை நிலையங்களில்அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி முதல் 26 டிகிரி வரையிலும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (பிப்.5) அன்று மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.