திருச்செந்தூர், பிப். 10: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை (பிப்ரவரி 11) தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் புஷ்பாஞ்சலி பூஜைக்கு பக்தர்கள் மாலை 3 மணி வரை வாசனை மலர்களை அளிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டது தை உத்திர நட்சத்திரத்தில்தான். எனவே, ஆண்டுதோறும் தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகின்றன.
இதைத்தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. காலை 8.15 மணிக்கு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.
புஷ்பாஞ்சலிக்கு அழகும், மணமும் மிக்க மலர்களை (கேந்தி பூ தவிர) சனிக்கிழமை மாலை 3 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம்.
இரவு, சுவாமி குமரவிடங்கப்பெருமான் அம்பாளுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.