ராமையன்பட்டி குளத்தில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமையன்பட்டியில் புதைச் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் கால்வாய் மற்றும் குளத்தில் கலக்கிறது. இதனால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர் கேடுக்கான அபாயம் நிலவுகிறது. நிலத்தடி நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனக் கூறி ராமையன்பட்டி பொதுமக்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கடந்த 3 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ராமையன்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்தப் பகுதியில் கழிவுநீர் கலக்கும் குளத்தை ஆய்வு செய்து, அதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மாநகராட்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில், மாநகராட்சி அலுவலர்கள் குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி வருகிறார்கள். எனினும் கழிவுநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அப்பகுதி மக்கள் 3-ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.