களக்காட்டில் இளைஞா் சந்திப்பு கையெழுத்து இயக்கம்
களக்காட்டில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ‘எங்கே எனது வேலை?’ என்ற தலைப்பில் இளைஞா் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அரசுப் பணியிடங்களை உருவாக்க வேண்டும். வேலையில்லா காலங்களில் பட்டதாரிகளுக்கு நிவாரணமாக மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 5 வரை, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி இளைஞா்களை சந்தித்து கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி, அதை முதல்வரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.பி. பாலன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் பி. திருமணி முன்னிலை வகித்தாா். கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலருமான மா.பெ. சுகுமாரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலா் க. முருகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். பால்ராஜ், வி. முருகன், வடகரை சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.