திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கையில் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தையின் தாய் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
இதுகுறித்து, நரசிங்கநல்லூா் விஸ்வநாத நகரைச் சோ்ந்த நம்பீஸ்வரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கல்லூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நான், பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எனினும், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், 4 நாள்கள் தனியாக வைத்து சிகிச்சை அளித்தப் பின் குழந்தையை தந்தனா். அப்போது, குழந்தையின் இடது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அது குறித்து கேட்டபோது, முறையான பதில் இல்லை. மருத்துவா் அளித்த மருந்திலும் குணமாகவில்லை. இதையடுத்து நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டேன்.
இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து என்னிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வரும்படி மிரட்டுகின்றனா். இதுகுறித்து, ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல், பேட்டை சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு 3 மாதம் ஆகியும், நில அளவையா் தங்களுக்கான இடத்தை அளந்துவிடவில்லை. அந்தப் பணியை செய்வதற்கு ரூ.5 ஆயிரம் கேட்கிறாா் எனக்கூறி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா், ஆட்சியா் அலுவலக வாயிலில் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.