நாகர்கோவில் அருகே திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டனர்.
நாகர்கோவில் பார்வதிபுரம் கே.பி.சாலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 52 சென்ட் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் 85 வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதை வரைமுறைப்படுத்தவும், வாடகை நிர்ணயிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்திருந்தோரிடம் இடத்தை விட்டுத் தருவதாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. 85 பேரில் 15 பேர் கடிதம் கொடுத்துள்ளனர். மற்றவர்களிடம் கடிதம் தரக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள 10 சென்ட் இடத்தைச் சுற்றி தனிநபர் சுற்றுச்சுவர் கட்டி அந்த இடத்தை விற்கவும் முடிவு செய்திருந்தாராம்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் இரா. ஞானசேகர் தலைமையில் ஆக்கிரமிப்பு மீட்புக்குழுத் தலைவர் ஜீவானந்தம், அலுவலக மேலாளர் கோமதிநாயகம், கண்காணிப்பாளர் ரவீந்திரன், திருச்செந்தூர் கோயில் மேலாளர் ஜெயந்திநாதன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிலம் மீட்கப்பட்டு, அதில் "கோயில் நிலம்' என போர்டு வைக்கப்பட்டது.