பதவி உயர்வு வழங்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து 27 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தாலும் பதவி உயர்வு கிடைக்காத நிலை இருந்ததாம். இதைத் தொடர்ந்து அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்தது முதல் முறையே 8, 16, 24ஆவது ஆண்டுகளில் பதவி உயர்வு அளிப்பது என கடந்த பிப்ரவரி 28இல் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசு கால்நடை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணையில் 90 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில், பதவி உயர்வு அரசாணையை திரும்பப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாகர்கோவிலிலுள்ள ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் பரமேஷ்வரன் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 49 அரசு கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் சுமார் 47 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வு குறித்த அரசாணையை அமல்படுத்தவும், அதை திருப்பப் பெறக்கூடாது எனவும் வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.