கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே வாழைக்காய் வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
களியக்காவிளை அருகேயுள்ள வேங்கவிளை பகுதியைச் சேர்ந்த கொச்சுமணி மகன் செல்வராஜ் (60). களியக்காவிளை சந்தையில் வாழைக் குலை வியாபாரம் செய்துவந்தார். இவரது மனைவி நிர்மலா (58). இத் தம்பதியின் மகன்கள் வினு (34),அனு (30). இவர்களில் வினுவுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி,2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் விட்டுப் பிரிந்து சென்றவிட்டாராம். இதனிடையே,வினு மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி,பெற்றோரையும்,குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்தாராம்.
இந்நிலையில் புதன்கிழமை மாலையில் தந்தை செல்வராஜ் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்தபோது பின்பக்கமாக வந்து அவரது கழுத்தை வினு கத்தியால்அறுத்தாராம். இதில் செல்வராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த களியக்காவிளை போலீஸார்,அங்கு சென்று செல்வராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீஸார் வினுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தக்கலை சரக உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.