குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (49) இவர் ஐசிஎப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி விமல் தங்கம் (45) அங்குள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பாலமுருகனின் தங்கை மகன் பழனிபிரேம் (25), இவருடைய மனைவி மீனாம்பிகா (21), பாலமுருகனின் மகன் தனிஷ் (18). இதில் பழனிபிரேமுக்கும், மீனாம்பிகாவுக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.
கோடை விடுமுறையையொட்டி நாகர்கோவிலில் பொதுப்பணித் துறையில் பணி செய்யும் உறவினர் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
பின்னர் அங்கிருந்து புதன்கிழமை பிற்பகலில் குமரி மாவட்டம் சிவலோகம் பகுதியிலுள்ள சிற்றாறு 2 அணைக்கு வந்துள்ளனர். பின்னர் இவர்கள் 5 பேரும் ஆய்வு மாளிகை அருகே அணையில் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பாலமுருகன் திடீரென்று தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக அவரைக் காப்பாற்ற விமல் தங்கம் உள்ளிட்டோர் முயன்றுள்ளனர். இதில் பழனிகுமார் மற்றும் தனிஷின் அலறல் சப்தம் கேட்டு அப் பகுதியில் நின்ற பொதுப்பணித் துறையினரும், போலீஸாரும் தண்ணீரில் குதித்து மூழ்கிக் கொண்டிருந்த மீனாம்பிகாவையும், விமல்தங்கத்தையும் உடனடியாக மீட்டனர்.
இதில் மீனாம்பிகாவுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டதால் உயிர் பிழைத்தார். விமல் தங்கம் குலசேகரம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்நிலையில் பாலமுருகன் சிறிது நேர தேடலுக்குப் பின்னர் சலடமாக மீட்கப்பட்டார். பழனி பிரேமுக்கும், தனிஷுக்கும் பாதிப்பில்லை.
இதுகுறித்து கடையாலுமூடு போலீஸார் வழக்குப் பதிந்து சடலங்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.