சதாவதானி செய்குதம்பி பாவலரின் 144 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து, சதாவதானி செய்குதம்பி பாவலரின் திருவுருவ படத்தை திறந்துவைத்து, பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், பாராட்டு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
சதாவதானி செய்குதம்பி பாவலர் அறக்கட்டளை நற்பணி மன்றத்தின் சார்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் இடம் பிடித்த 2 மாணவிகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில், பள்ளி மாணவர், மாணவியர்கள் புளு வேல் விளையாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். புளு வேல் விளையாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு சுவரொட்டிகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்குஆட்சியர் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அருளரசு, சதாவதானி செய்குதம்பி பாவலர் தமிழ்ச் சங்கத் தலைவர் ஹாஜி பாவலர் பி.ஏ.சித்திக், பாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் எஸ்.ஆர். ஹாஜிபாபு, பாவலர் நற்பணி மன்றத்தின் பொருளாளர் ஹாஜி எஸ். மலுக்குமுகம்மது, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் (கட்டடம் மற்றும் கட்டுமானம்) சுனிதா, நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம், குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சொக்கலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) நி.சையத் முஹம்மத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.