கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது., செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை பொய்த்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் வடகிழக்குப் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் சாரல் மழை மட்டும் பெய்துவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை லேசான தூறலுடன் தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பெய்யத் தொடங்கியது.
நாகர்கோவில் நகரில் பலத்த மழை பெய்ததால், நகரில் உள்ள முக்கிய சாலைகளான கேப் சாலை, செம்மாங்குடி சாலை, மீனாட்சிபுரம் சாலை, கோட்டாறு, செட்டிக்குளம் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கன்னியாகுமரி, கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், சுருளோடு, இரணியல், அடையாமடை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. முள்ளங்கினாவிளை பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அங்கு அதிகபட்ச மாக 14 செ.மீ. மழை பதிவானது. அருமனை, குலசேகரம், மார்த்தாண்டம், திருவட்டாறு பகுதியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 11.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 563 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 477 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 403 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை, அனந்தனாறு, நாஞ்சில் நாடு, புத்தனாறு கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை பகுதியிலும் லேசான மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:
பேச்சிப்பாறை-57.4, பெருஞ்சாணி-81.4, சிற்றாறு-1-65.6, சிற்றாறு-2-36.4, மாம்பழத் துறையாறு-21, முள்ளங்கினா விளை-140, புத்தன் அணை-80, கோழிப்போர்விளை-36.5, நாகர்கோவில்-62, பூதப் பாண்டி-2.8, சுருளோடு-44.2, கன்னிமார்-6.4, கொட் டாரம்-53.6, பாலமோர்-6.6, இரணியல்-47, ஆணைக்கிடங்கு-24, குளச் சல்-39, அடையாமடை-48.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.