பளுகல் அருகே மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
பளுகல் அருகேயுள்ள இடைக்கோடு அம்பரக்காலை வீட்டைச் சேர்ந்தவர் ராஜ லால்பின் மகன் நோபின்லால் (32), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். இவர் மோட்டார் சைக்கிளில் சனிக்கிழமை மேல்பாலை பகுதியிலுள்ள கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது, அப்பகுதி சாலையோர மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நோபின்லால் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.