கன்னியாகுமரி மாவட்டத்தில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களைச் சேர்ந்த களப் பகுதிகளில், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தங்களது களப்பகுதியில் வங்கிகளுக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் வகையில் இந்தப் பொறுப்பு அமையும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வங்கியில் கடன் பெற உதவுதல், அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதைக் கண்காணித்தல், கடன் திரும்ப முகாம்களுக்கு உதவுதல் போன்ற பணிகள் இருக்கும்.
விண்ணப்பதாரரின் வயது 1.3.2018இல் 18 வயதிற்கு மேல்- 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2. கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மாதாந்திர மதிப்பூதியம் ரூ.2,000, அந்தந்த ஊராட்சிக் குழு கூட்டமைப்பு மூலம் வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பத்தை, " திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு, மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.