தேசிய சேமிப்பு நிதி மற்றும் நிவாரணத்திட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை இணைக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தேரூர் தென்குமரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் யு.ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
தேசிய சேமிப்பு நிதி மற்றும் நிவாரணத்திட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை இணைத்து கேரளம், ஆந்திரம், உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவது போன்று தமிழகத்திலும் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். கடல் மீனவர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளும் உள்நாட்டு மீனவர்களுக்கும் உண்டு. எனவே அவர்களை போன்று அனைத்துச் சலுகைகளும் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வடசேரி உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் டீ.ஜேசுராஜன், சகாயராஜ், கிருஷ்ணன், டென்னிஸ், அந்தோணி முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கிமீன் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் எஸ்.அந்தோணி, மாவட்டத் தலைவர் கே. அலெக்சாண்டர், சிஐடியூ மாவட்டச் செயலர் கே. தங்கமோகன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலப் பொருளாளர் எம்.ஏ உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.செல்லசாமி உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளான உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொண்டனர்.