கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முறையானஅனுமதி பெற வேண்டும் என்றார் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிசெய்யும் பெண்கள் தங்கும் விடுதிகள், மெட்ரிக் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி விடுதிகள், தொழில் நிறுவனங்களில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து மாவட்ட ஆட்சியரின் உரிமம் பெற வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் உரிமம் பதிவு செய்வது குறித்த விவரங்களை அறிவதற்கும், விண்ணப்பங்கள் பெறுவதற்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துவோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் விடுதிகள், பணி செய்யும் பெண்கள் தங்கும் விடுதிகள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலுள்ள பெண்கள் விடுதிகள் நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியரக இணைப்புக் கட்டடம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு இல்லங்கள் நடத்துவோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் செயல்படும் விடுதிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும், தொடர்பு கொண்டு ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.