கேரளத்துக்கு காரில் கடத்திச் செல்ல முயன்ற 400 லிட்டர் மானியவிலை மண்ணெண்ணெய்யை பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில், தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர் இனயம் அருகே வில்லாரிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று தாளயங்கோட்டை பகுதியில் வைத்து காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். காரில், மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, காருடன் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் இனயம் அரசு மண்ணெண்ணெய் கிட்டங்கியிலும், கார் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மண்ணெண்ணெய் கடத்தியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.