பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி சுசீந்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு சுசீந்திரம் சோழன்திட்டை அணைக்கட்டில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகையில் தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் முதல் காப்பாளர்கள் பங்குபெற்றனர்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகள், பொதுமக்கள் ஒத்திகை நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் சத்தியகுமார் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு வெள்ள அபாய காலங்களில் தப்பிப்பது என்பது குறித்து விளக்கிக் கூறினார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் முகாம்களில் தங்க வைப்பது, அத்தியாவசிய சேவைகள் வழங்குவது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சிகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.சுகன்யா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.