மார்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தக்கலை அருகேயுள்ள முளகுமூடு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (52). இவர் வெள்ளிகோடு பகுதியில் மருத்துக்கடை நடத்தி வந்ததுடன், ஆட்டோவும் ஓட்டி வந்தார். வெள்ளிக்கோடு திறம்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் ஆன்றணி சேவியர் (52), அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநர். இவர் பணி முடிந்து சனிக்கிழமை காலையில் மார்த்தாண்டம் வந்தார். அவரது மனைவி சுபலீனா (47). இருவரும் ஸ்டீபன்ராஜின் ஆட்டோவில் மார்த்தாண்டம் சென்று வீடு திரும்பிய போது, மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் , எதிரே வந்த வேன் ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன்ராஜ், பயணி சுபலீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜாண் ஆன்றணி சேவியர் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் நாகர்கோவில் கீழசங்கரன்குழி பகுதியைச் சேர்ந்த மனோகரன் (42) மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.