சுங்கான்கடை வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்தார். செயலர் கிளாரிசா வின்சென்ட் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஸ்டெல்லா வரவேற்றார். கல்லூரி நிர்வாகி சரோஜா வின்சென்ட் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழக ஏடிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று, 348 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியது: தங்கள் பலத்தையும், பலவீனத்தையும் பட்டியலிட்டு ஆராய்ந்து அறிந்தால் பிரச்னைகளுக்கு தாங்களே தீர்வுகாணலாம். நீங்கள் சாதனையாளர்களாக வேண்டுமானால், நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக தினசரி செய்தித்தாள்கள், புத்தகங்கள் வாசிக்க வேண்டும். நேர்மறையான சிந்தனை கொண்டு புறம் பேசுவதை தவிர்த்தல், செய்யும் தொழிலை தெய்வம் என மதித்து, நேசித்து மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்புடன் செயல்படுதல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் வேண்டும் என்றார் அவர்.
கல்லூரி நிறுவனர் உறுதிமொழி வாசிக்க மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் எம்.பி. எம்.சி.பாலன் பல்கலைக்கழக அளவில் தரவரிசையின் இடம் பெற்ற மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் தலைமையில், துறைத் தலைவர்கள் பிரியா, வர்சா, உஷாராணி, நந்தா பிரியா மற்றும் கபிலாராணி ஆகியோர் செய்திருந்தனர்.