கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் நாகர்கோவில் ரோஜாவனம் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
தோவாளை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்புப் பணியை தொழுநோய் தடுப்புத் துணை இயக்குநர் கிரிஜா தொடங்கிவைத்தார்.
இப்பணியில், ரோஜாவனம் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி முதல்வர் லியாகத் அலி தலைமையில், நிர்வாக அலுவலர் நடராஜன் மேற்பார்வையில் மாணவர்கள் கலந்துகொண்டனர். முதல்கட்டமாக, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, தோவாளை ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிகளிலும், 2 ஆம் கட்டமாக தடிக்காரன்கோணம், அருமநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிகளிலும், பால்குளம், கீரிப்பாறை போன்ற மலைப் பகுதிகளிலும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.
இதுகுறித்து மாவட்டதொழுநோய் துணை இயக்குநர் கிரிஜா கூறியது:
தோவாளை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வுப் பணி நடைபெற்றது. கணக்கெடுப்பின்போது 6 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். தொழுநோயின் தாக்கம் மற்ற மாவட்டங்களைவிட இம்மாவட்டத்தில் மிகக்குறைவு என்றார் அவர்.
முன்னதாக, ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சுகாதாரஆய்வாளர் பயிற்சி மாணவர்கள் 120 பேருக்கு கணக்கெடுப்பு தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அக்கல்லூரி பேராசிரியர்கள், தொழுநோய் மேற்பார்வையாளர்கள், சுகாதாரஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.