கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சங்க 38ஆவது பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், 75 வயது நிரம்பிய 16 உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் நாகர்கோவிலில் சிறப்பாக பணியாற்றியவர்களாக சங்கம் சார்பில் தேர்வு பெற்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், மோகன் ஆகியோருக்கும் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயலர் ராஜாசிங், செயற்குழு உறுப்பினர்கள் மனோகரபாண்டியன், சாம்நெல்சன், அப்துல்காதர், ஜோசப் செல்வின், டானியல், ஸ்ரீகுமார், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி. சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், 25 ஆண்டுகள் தலைமை காவலர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கி, அதே நிலையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதி திட்டம் காவல்துறையிலும் அமல்படுத்த வேண்டும். தமிழக காவல்துறையில் காவலர்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.