உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ரூ. 2 கோடியில் அம்மா கண் மருத்துவமனை திறப்பு

ரூ. 2 கோடி மதிப்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள அம்மா கண் மருத்துவமனை  திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:04 am IST

ரூ. 2 கோடி மதிப்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள அம்மா கண் மருத்துவமனை  திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன கண் மருத்துவமனை கட்டுவதற்கு,  விஜயகுமார் எம்.பி.  தனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.  இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு,  மருத்துவக் கல்லூரி டீன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  கண் மருத்துவமனையை திறந்து வைத்து விஜயகுமார் எம்.பி. பேசியதாவது:
குமரி மாவட்டத்தில் ஏழை,எளிய மக்கள் ஏராளமானோர்  கண் சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால் திருநெல்வேலி அல்லது திருவனந்தபுரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.  இதை  நிவர்த்தி செய்யும் வகையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையிலும் வசதிகள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரூ. 2 கோடி மதிப்பில் ஆசாரிப்பள்ளத்தில் அம்மா கண் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 
இந்த மருத்துவமனைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இம்மருத்துவமனையில் அனைத்து உயர்தர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.  அதற்கான உபகரணங்களும் இங்கு உள்ளது.  இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
கோட்டாறு  அரசு  ஆயுர்வேத மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கை வசதி கொண்ட கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கல்வியில் சிறந்த மாவட்டமான குமரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு சீர்மிகு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  நாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில்  உலக்கையாறு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.  
தொடர்ந்து நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் ஞானசேகர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் செயலர் சந்தையடி பாலகிருஷ்ணன், கனகராஜன், சிவா, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ,  மருத்துவர்கள் ஜெயலால், செந்தில்வேல், ஆறுமுகவேலன், லியோடேவிட்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.