கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கேரளத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அண்டை மாநிலமான கேரளத்தில் தேர்வுகள் முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி, சொத்தவிளை, வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி என முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கேரள சுற்றுலாப் பயணிகளுடன் ஏராளமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் திரளாக வருவதால் கூட்டம் அலைமோதுகிறது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், பேரூராட்சிப் பூங்கா, சன்னதி தெரு, சூரிய அஸ்தமனப் பூங்கா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்ல நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.
தமிழகத்திலும் ஏப். 12ஆம் தேதிக்குப் பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும்.