மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு வாகனப் பிரசார பயணம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.கே.சாமி. இவர், தில்லியில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராக உள்ளார். மேலும், இந்து பாதுகாப்புப் படை என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள இவர் அவ்வமைப்பின் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடந்த 12ஆம் தேதி சென்னையில் இருந்து விழிப்புணர்வு வாகனப் பிரசாரத்தை தொடங்கினார். விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்துக்கள் பாதுகாப்புப் படை என்ற என்ற அமைப்பை அண்மையில் தொடங்கியுள்ளேன். சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த அமைப்பை நடத்தி வருகிறேன்.
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் 75 பேருடன் தொடங்கிய விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் கன்னியாகுமரியில் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1,800 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்துள்ளோம். 45 இடங்களில் சுமார் 1 லட்சம் வாக்காளர்களை சந்தித்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம். வாக்குப்பதிவு நாளன்று (ஏப். 18) வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களை வாக்குச்சாவடிக்கு எங்கள் செலவில் அழைத்து வந்து வாக்களிக்கும் வசதியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் களத்தில் உள்ளனர். எங்கள் அமைப்பினரை 75500-15555 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அழைத்தால் நேரடியாக உதவி செய்யத் தயாராக உள்ளனர்.
மேலும், இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற எங்களின் முயற்சி வெற்றி பெறும் என்றார் அவர்.