களக்காட்டில் புதன்கிழமை சூறைக்காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில், ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தன; குடிசை சேதமடைந்தது.
களக்காடு, சுற்றுவட்டாரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பிப்ரவரி தொடக்கத்திலேயே வடக்குப் பச்சையாறு அணை, கொடுமுடியாறு அணைகளும், மார்ச் மாதத் தொடக்கத்தில் பெரும்பாலான பாசனக் குளங்களும் வறண்டு விட்டன. இதனிடையே, களக்காடு தலையணையும் வறண்டது.
இந்நிலையில், களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் சூறைக்காற்று, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால், வெப்பம் வெகுவாக தணிந்துள்ளது; பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
களக்காடு அருகே கல்லடிசிதம்பரபுரத்தை அடுத்த ராஜலிங்கபுரத்தில் பெ. சாமுவேல் (51) என்பவரது குடிசை வீடு மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது. சூறைக்காற்று காரணமாக கருவேலன்குளத்தில் மின்கம்பம் சேதமானதால் பிற்பகல் 3.45 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் தடைபட்டது.
ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்: களக்காடு, சுற்றுவட்டாரப் பகுதியில் நிகழாண்டு 5 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. மார்ச் மாத இறுதியில் தொடங்கிய வாழைத்தார் சீசன், மே 2ஆவது வாரம் முடிவடையும். ஆனால், நிகழாண்டு வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் ஏப்ரல் தொடக்கத்திலேயே வாழைத்தார் சீசன் விறுவிறுப்படைந்தது. இதனால், கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டு வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் விவசாயிகள் வாழைப் பயிரைக் காப்பாற்ற கடுமையாகப் போராடி வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பத்மனேரி, மஞ்சுவிளை, கீழப்பத்தை, மேலப்பத்தை, சிதம்பரபுரம், சீவலப்பேரி, மூங்கிலடி, கக்கன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.