தக்கலை சங்கமம் அரங்கில் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் நினைவு 2 நாள்கள் சிறுகதை முகாம் நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பில் "குதிரக்காவு' என்ற தலைப்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, கலை இலக்கிய பெருமன்ற தக்கலை கிளைத் தலைவர் ஜி.எஸ். தயாளன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் எம்.எம். பைசல் வரவேற்றார். மாவட்டச் செயலர் எம். விஜயகுமார் வாழ்த்திப் பேசினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை தலைவரும், ஆய்வாளருமான அ.ராமசாமி முகாமைத் தொடங்கிவைத்தார். கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவர் சி.சொக்கலிங்கம், , மாநிலச் செயலர் ஹாமீம் முஸ்தபா ஆகியோர் அறிமுகவுரையாற்றினர். எழுத்தாளர் சு. வேணுகோபால், சிறுகதைகள் குறித்து கருத்துரையாற்றினார். 2 நாள்கள் நடைபெற்ற இம்முகாமில், 60-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்கேற்று, ஆரம்ப கால சிறுகதைகள் முதல் சமகால சிறுகதைகள் வரையிலான சிறுகதைகளின் போக்குகள் குறித்த உரையாடல் நிகழ்த்தினர்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா.தேவதாஸ், களந்தை பீர்முகமது, ஆர்.பிரேம்குமார், குமாரசெல்வா, லாவண்யா சுந்தராஜன், எஸ்.ஜே.சிவசங்கர், மீரான்மைதீன், முஜீப்ரகுமான், குறும்பனை பெர்லின், செல்வராஜ், பிரபு தர்மராஜ், தக்கலை பென்னி, எஸ்.கே. கங்கா, இடலாக்குடி அசன், ஜீவா, அமுதா ஆர்த்தி, சப்திகா, கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பாண்டு, நாணற் காடன், சேலம் ராஜா, அனந்த சுப்ரமணியம், பேராசிரியர் ராஜேஷ், அட்லின் ஜெபா, சிவராஜ் பாரதி, செல்சேவிஸ், சுரேஷ் மான்யா, லாசர் ஜோசப், தா.சிந்துகுமார் ஆகியோர் சிறுகதைகள் குறித்த உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிகளை நட. சிவகுமார் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை எம்.எம். பைசல், ஜி.எஸ். தயாளன், ஹாமிம் முஸ்தபா ஆகியோர் செய்திருந்தனர்.