கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கிய 1757 இல் நடைபெற்ற பிளாசி போர், 1806 இல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சி, 1857 இல் நடைபெற்ற சிப்பாய் கலகம், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற நிகழ்வுகளும்,
தென்னிந்தியாவில் வெள்ளையனை எதிர்த்த பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் என பல மன்னர்களின் தியாகங்கள், சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, தேசியக் கவிஞர்கள், தமிழ் தியாகிகள், கன்னியாகுமரி மாவட்டத் தியாகிகள் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
இக்கண்காட்சியை நாகர்கோவில் இந்துக் கல்லுரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியை தாணம்மாள் தொடங்கி வைத்து "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் குமரி மாவட்டத்தின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார். கல்லூரி மாணவர், மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
ஏற்பாடுகளை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் வே.கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.